சென்னை

நேற்று தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரசில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காகப் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே வாக்காளர்களுக்குப் பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை  எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8:10 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இதன் மூலமாக அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இரவு 8:35 மணிக்கு வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பயணிகளில் உடமைகளை வாங்கி அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு சந்தேகப்பபடும்படி இருந்த 3 பேரின் உடமைகளை எடுத்து பரிசோதித்ததில் அவர்களது பை களில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அங்கு பணத்தை எண்ணிப் பார்க்கும்போது அதில் ரூ,3.99 கோடி பணம் இருந்ததும் பிடிபட்டவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள்: அந்த பணத்தை யாருக்காகக் கொண்டு சென்றார்கள்? வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகக் கொண்டு சென்றார்களா? பணத்தை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் காவலர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பணத்துடன் பிடிபட்டவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. கைதான மூவரும் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..