சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம்  தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. டிசம்பர ஆரம்பத்தில் உருவான மிக்ஜம் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

கடந்த 7 நாட்களாக அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், ராமநாதபுரம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.