சென்னை

மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடத் தமிழகத்துக்கு மத்திய குழு நாளை வருகிறது.

கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்ததில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த 7 ஆம் தேதி வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், கடந்த 7-ந் தேதி சென்னைக்கு வந்தார்.

ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் 2-வது தவணைத்தொகையான ரூ.450 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில்,

“கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய சேதங்களையும், அதில் தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப்பணி கள் பற்றியும் நேரடியாகச் சென்று அறிந்து மதிப்பிடுவதற்காக மத்தியக் குழுவை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழக அரசு சமர்ப்பித்ததும் தமிழ்நாட்டிற்கு அதே மத்தியக் குழு சென்று, பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்கும். 

பின்னர் மத்திய அரசு வழங்க வேண்டிய உதவித்தொகை குறித்த இறுதி பரிந்துரைகளை மத்தியக் குழு அளிக்கும். அதோடு, மிக்ஜம் புயல் மிகக் கடுமையானதாகக் கருதப்பட வேண்டுமா? என்பது குறித்தும் மத்திய குழு பரிந்துரைக்கும். 

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி இந்த குழுவுக்குத் தலைமை வகிப்பார். மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். 

எனவே மத்தியக் குழுவின் தலைவரின் கீழ் செயல்படுவதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்கள் தரப்பில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை மத்திய உள்துறைக்கு 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள தீவிரத்தை உணர்ந்து அங்கு மத்தியக் குழு சென்று நாளை (திங்கட்கிழமை) மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளைத் தொடங்க உள்ளது. மதிப்பிடும் பணிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பின்னர் ஒரு வாரத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” 

என்று கூறப்பட்டுள்ளது.