ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர். இந்த நிலையில் சமீபத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக. 13 இடங்களிலும், அதிமுக. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றி உள்ளது. அது போல் திமுக கூட்டணி கட்சியின் பலம் 110 ஆனது. திமுக கூட்டணியில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியின் பலம் 109 ஆகும்.

திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலை எடுப்பார்கள் ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, “நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தான் உள்ளேன். நான் அதிமுக தொண்டன் தான். நான் எப்போதும் ஜெயலலிதாவின் விசுவாசி தான். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நான் அதிமுகவின் கொறடா உத்தரவு படி தான் செயல்படுவேன். ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக ஆட்சியை விழ்த்த நான் துணைபோக மாட்டேன். எனக்கும் மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தான் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.

தற்போது நடந்து முடிந்து உள்ள மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தான். அதிமுக தொண்டர்களை, அவர் சரியாக வழிநடத்தவில்லை. இதன் காரணமாக திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இனிமேலாவது அதிமுக மாவட்ட செயலாளர் அனைவரையும் அரவணைத்து அவர் செல்ல வேண்டும். அப்போதுதான் அதிமுக வெற்றி பெற முடியும். கட்சி தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்கள் விருப்பப்படி செயல்படவேண்டும்” என்று தெரிவித்தார்.