மதுரை:

றைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அழகிரியின் குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருவதாகவும்,  அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு கழக நிர்வாகிகள் படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் எழுந்த சகோதரர்களுக்கு இடையேயான  அதிகாரப்போட்டி காரணமாக, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் மு.க.அழகிரி. கருணாநிதி மறைவுக்கு பிறகும், கட்சியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், சென்னையில் தனியாக தனது ஆதரவாளர்கள் மூலம் மாபெரும் பேரணியையும் நடத்தினார். ஆனால், கட்சியில் அவருக்கு பதவி வழங்கப்பட மறுக்கப்பட்டதால், அமைதியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அழகிரி மனைவி,  மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வெளி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அழகிரிக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் விரைந்து வந்து அவருக்கு சிகிச்சை அளித்தாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தனது சத்யசாய் நகர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் அவருக்கு அவரது  மகள் வழி பேரன் இதயநிதி அருகில் இருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அழகிரிக்கு உடல்நலக்குறைவு எனக் கேள்விப்பட்டதும் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள்  மு.க.அழகிரி இல்லத்திற்கே சென்று விசாரித்து வருவதாகவும், அழகிரியின் உடல்நிலையை குறித்து  மருத்துவர்கள் குழு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கி வருவ தாகவும் கூறப்படுகிறது.