சென்னை

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். 

நேற்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர்.சிவசங்கர் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் போக்குவரத்துக் கழக பேர்ந்துகள் முறையாக இயக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சிறப்பு அலுவலர், போக்குவரத்துத்துறை ஆணையர், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையாளர்(போக்குவரத்து) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இம்முனையத்தில் இருந்து அனைத்து தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் புறப்பாடு செய்வது குறித்தும் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து முழுமையாக புறப்பாடு செய்வது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.