சென்னை

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆண்டுக்கு ஆயிரம் பேரை முருகன் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்குப் பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2,646 ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.

பிறகு அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை திருத்தலங்களுக்குப் பக்தர்களைக் கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர்,

“ஆண்டுக்கு ஆயிரம் பேரை முருகனின் அறுபடை வீடுகளுக்குக் கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். இதன்  முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி ,28 ஆம் தேதி துவங்குகிறது”

திமுக ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது.   தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களைக் கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். 

இதில் முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி,28 ஆம் தேதி துவங்குகிறது.  பயணத்துக்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இடில் தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்து செல்லப்படுவார்கள். 

மற்ற தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.  60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

கடந்த 2 ஆண்டுகளாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.” 

என்று தெரிவித்துள்ளார்.