சென்னை

துபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

Sample pic

 

சென்னை எழும்பூரில் டாஸ்மாக் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்நிகழ்வுக்கு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.  அவருடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியன், மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் கலந்து கொண்டனர்.  இவர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர், “தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 410 டாஸ்மாக் கடைகளும், 2 ஆயிரத்து 808 பார்களும் உள்ளன. பார்கள் தற்போது இயங்கவில்லை. பல கால கட்டங்களில் நடத்திய ஆய்வில் 529 கடைகளில் நடந்த விதிமீறல் தொடர்பாக 1,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் ஒரு வாரத்துக்குள் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட ஒரு நிமிடம் கூட கடைகளைத் திறந்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் நேரம் கடைகளைத் திறந்து வைத்து மதுபானங்கள் விற்பது கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவே ரசீது வழங்கும் நடைமுறை கொண்டுவர வலியுறுத்தப்படுகிறது.  ஆனால்  மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மதுபாட்டில்கள் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது.

டாஸ்மாக்கைப் பொறுத்தமட்டில் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. இனி வருங்காலங்களிலும் அதுபோன்று இலக்கு நிர்ணயிக்கப்போவதும் இல்லை. டாஸ்மாக் கடைகளைக் குறைப்பது என்பது கொள்கை ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும்” என்று கூறினார்.