சென்னை: மேயரை எப்படி அழைக்க வேண்டும் என முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது மேயர் தொடர்பாக கடந்த கால நிகழ்வுகளை விவரித்தார்.

தற்போதைய தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன். இவர் இன்று  கே.கே.நகரில் நடைபெற்ற 23-ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த முகாமை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் அமைச்சர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டபேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.05) 23-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  இதுவரை நடத்தப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,72,41,003 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10,00,30,346 ஆக உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி 91.54% பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 72.62% பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 71% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 8,45,289 பேர் செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். அதில் 6 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மேயரை அழைப்பது எப்படி என்பது குறித்து விளக்கத் தொடங்கினார். சென்னை மாநகராட்சி மேயரை அழைக்கும் பொழுது, வணக்கத்திற்குரிய என்று அழைக்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றியதாக கூறியவர், ஜெயலலிதா அம்மையார்  தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, மாண்புமிகு என அரசாணை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், மாநகராட்சி மேயருக்கு பல சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜமேதார் என்ற பட்டம் ஆளுநர், முதலமைச்சர், மேயர் ஆகியோரின் உதவியாளர் களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் இனி மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என அழைக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  உக்ரைனிலிருந்து வந்த தமிழ்நாடு மருத்துவ மாணவர்களுக்கு முடிந்த வரை, தமிழ்நாடு அரசு உதவி செய்யும். தமிழ்நாடு அரசின் குழு உக்ரைன் சென்றிருப்பது அரசியல் ஆதாயத்திற்கு என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.  அண்ணாமலை பேசுவது தமிழ்நாடு மக்கள் மனதை எவ்வளவு புண் படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்”  அது அவறு. அவர்கள்  மத்திய அரசுக்கு உதவியாக தான் தமிழ்நாடு அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை அனுப்பி உள்ளது.

உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர். அங்கு தமிழகத்தை சார்ந்த சுமார் 2,200 மாணவர் கள் பயின்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.