சென்னை: சென்னையில் உணவின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், இன்று (12–ந் தேதி) உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிம் பேசியவர்,  உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஏற்கனவே 6 உணவு பகுப்பாய்வு கூடங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் சென்னை-கிண்டி, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படுகிறது.

கடந்த ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 34,980, உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 2266 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றதாகவும், 7405 உணவு மாதிரிகள் தரமற்றதாகவும் கண்டறியப்பட்டு, 6542 வழக்குகள் தொடரப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1264 வழக்குகள் தொடரப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.2.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கேற்றவாறு, 2022–-2023–ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்பு எண்.89–ல், கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடங்கள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று அறிவித்தற்கிணங்க, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்காக புதியதாக வாங்கப்பட்ட 4 நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் இன்று தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இப்பகுப்பாய்வக வாகனங்களில் 30 வகையான உணவு பொருட்களில் கலப்படங்களை கண்டறியும் வசதிகள் மற்றும் கலப்படம் குறித்த விளக்கப் படங்களும் உள்ளது.

மேலும் இவ்வாகனங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செல்லும் வகையில் அட்டவணைப்படி தயாரிக்கப்பட்டு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு செல்லும்போது மக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு தரமான உணவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஏற்கனவே புகார் தெரிவிப்பதற்கென்று 104 என்ற எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், புகைப்படத்துடன் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் 9444042322 உள்ளது.

இவ்வாறு  கூறினார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி. செல்வ விநாயகம், உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் தேவபார்த்தசாரதி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.