சென்னை: பள்ளி திறந்ததால் சில மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சில மாணாக்கர்கள், ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த பள்ளிகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை  தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது  அவர் கூறியதாவது,

மழை நீர் சேகரிப்பு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் மட்டும் 148 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையின் நீராதாரத்தை சேமிக்கும் வகையில்,  25 நீர்நிலைகள்  200 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 10.94 குடியிருப்பு உள்ளது அதில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.. மீதம் உள்ள 2 லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் தரப்பட உள்ளோம்.

சென்னையில் இனி வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனையே இல்லாத நிலை உருவாகும்.

திருமுல்லைவாயில் பகுதியில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்க கூடிய தண்ணீர் தொட்டி செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து, அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கோவை கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என கூறினார்.

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரை சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 100 % தடுப்பூசி போட கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். என்றார். மேலும், இந்தியாவில் இந்த இடத்திலும்  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம் அது குறித்த ஆய்வு நடத்திய வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி செலவாகும் என்று கூறுகிறார்கள் ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.