கோவில்பட்டி: எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி  தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை அவர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் சங்கரேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்தார். அப்போது நடிகர் விஜய், எம்ஜிஆரின் வேடம் போட்டு காணப்படுவது போன்ற சுவரொட்டி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதால் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. தமிழகத்தில் மிகப்பெரிய சக்தி, அதிமுக. இது அனைவருக்கும் தெரியும்.

தேர்தல் நேரத்தில் டெபாசிட் வாங்காத கட்சி கூட ஆட்சியை பிடிப்போம், முதல்வராவோம் என்று கூறுவார்கள். ஆனால் 2021ல் அதிமுக ஆட்சிதான் அமையும் என்று கூறினார்.