சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருதயஅறுவை சிகிச்சை  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல்மற்றும்  டிசம்பரில் உடல்நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் நேற்று (14ந்தேதி) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், இன்று மீண்டும்,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.