சென்னை: முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள மாநில அரசு தண்ணீரை திறந்துள்ள நிலையில், மைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழகஅரசின் நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரையில் நீரை தேக்கிவைக்க வழங்கிய ஆணையின்படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாத வாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது.

கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 28.10.2021 அன்று தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், 11.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்வரை, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை /அறிவிப்பு அளித்தபின் இன்று காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.

இது, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது . மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது . இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…