சென்னை, டிச.19

எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வரும் 24 ந் தேதி அன்று அவரது நினை விடத்தில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அ தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளான 24 ந் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

உறுதிமொழி

அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், மாவட்டச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு,

மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.