விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். படம் குறித்து விஜய்யிடம் அவர் என்ன தெரவித்தார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

ஏனென்றில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்குப் போட்டியாக இருப்பாரா?” என்று கேட்கப்பட்டது.

கமல் – விஜய்

அதற்கு பதிலளித்த கமல் ஹாஸன், “விஜய் அரசியலுக்கு வந்தால் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கப்படுகிறது. இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும்” என்றார்.

அடுத்ததாக, “வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை..,” என்றும் கிண்டலாக கூறினார்.

இதுவரை விஜய், நல்ல திரைப்படத்தில் நடிக்கவில்லை என்கிற அர்த்தத்தில் கமல் கூறியதாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிறகு, காட்சிகள் நீக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனாலும் படத்துக்கு விடப்பட்ட மிரட்டல்கள் குறித்து பலகும் கண்டனம் தெரிவித்தனர்.  காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் உட்பட அகில இநந்திய அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது.

இதற்கிடையே, “ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கு மீண்டும் தணிக்கை தேவையில்லை” என்று கமல் தெரிவித்தார்.

இந்த நிலையில் விஜய்யுடன் சேர்ந்து மெர்சல் திரைப்படத்தை இன்று பார்த்தார் கமல்.

முன்னதாக, “நல்ல படங்களில் விஜய் நடிக்க வேண்டும்” என்று பகிரங்கமாக கூறிய கமல், மெர்சல் குறித்து எப்படிப்பட்ட விமர்சனத்தை விஜய் முன், வைத்தார் என்பதுதான் இப்போது கோலிவுட் டாக் ஆக இருக்கிறது.