சென்னை:
தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளம் நிறைந்தவையாக காணப்படுகின்றன. ஆனால் விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருக்கின்றன. இந்த குறையை போக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதாவது, நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நோக்கத்தோடு தான் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என்று அறிவித்திருக்கிறோம்.

இதன் முதல்கட்டமாக செய்யாறில் 12,000 பேருக்கும், திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ளன என்று கூறினார். இதன்மூலம் இரண்டு பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்த தொழிற்சாலைகள் மூலம் மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைப்பதால், அதைவிட நான்கு மடங்கு பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அரசுக்கும் வருவாயை ஈட்டித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார்.