மதுரை,

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இனி வரும் காலங்களில்  தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக 5 துறைகளை கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் உள்ள  ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் அருகே இருந்த ஆயிரங்கால் மண்டமும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து காரணமாக வெப்பம் தாங்காமல் அங்கிருந்து தூண்களில் வெடிப்பு உருவாகியது. மேலும், சில பகுதிகளும் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தடய அறிவியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  எதிர்காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும், ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும்,  5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, இந்து சமய அற நிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட  5 துறைகளை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர்,  கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் குறித்தும், மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.