வேலூர்: வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் விதித்துள்ளார்.

அதன்படி மளிகை கடைகள் அனைத்தும் திங்கள், வியாழன், ஞாயிறு என வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஊரடங்கு முடியும் வரை இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்யாவசிய தேவையான பால் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.

இது தவிர காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள், பெட்டிக் கடைகள் எதுவும் திறக்கும் கூடாது. மருந்து கடைகள் வழக்கம்போல இயங்கும் என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.