சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மதிமுக பம்பரம் சின்னம் கோரி மதிமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதிமுக மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளோம்.
பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மதிமுக அளித்த மனுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ், விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி வழங்கினர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]