தென் மாவட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ. 40 கட்டணம் செலுத்தி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் நான்கு மணி நேரம் விரும்பியபடி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

கிளம்பாக்கத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்கள் பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறவேண்டிய நிலை உள்ளது.

இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ரூ. 80 கட்டணத்தில் நாள் முழுவதும் விரும்பியபடி பயணம் செய்யும் டிக்கெட் முறை மீண்டும் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரூ. 40 கட்டணம் செலுத்தி பயண நேரத்தில் இருந்து நான்கு மணிநேரம் செல்லும் வகையில் சென்னையின் எந்த பகுதியில் இருந்தும் விரும்பும் வகையில் பயணம் செய்யும் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டுகள் மாநகர பேருந்து நிலையத்திலோ அல்லது நடத்துனரிடமோ பெறமுடியாது என்று அறிவித்துள்ள போக்குவரத்துத்துறை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக (TNSTC) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போதே இதனையும் சேர்த்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தென்மாநிலங்கள் செல்லவோ அல்லது தென்மாநிலங்களில் இருந்து சென்னை வரவோ முன்பதிவு செய்பவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம் பெறப்பட்ட டிக்கெட் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 4 மணி நேரம் முன்னரும் வெளியூரில் இருந்து சென்னை வரும் போது வந்ததில் இருந்து 4 மணி நேரம் வரையும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.