சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வந்த இளைஞர்கள் நேறறு இரவு வெளியேறினார்கள்.

இதன் காரணமாக  மெரினாவில் கடந்த 8 நாளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. கடைசியாக போராடிய ஒரு சிலரும் நேற்று இரவு வெளியேறினார்கள்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.. இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை ஏற்படுத்தினார்.

ஆனால், ஜல்லிக்கட்டு போராளிகள்,  இந்த தற்காலிக சட்டம் தேவையில்லை,  நிரந்தர சட்டம் வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினார். இதன் காரணமாக வன்முறை வெடித்தது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே வன்முறை வெடித்தது.

இருப்பினும் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று பலரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக துணை கமி‌ஷனர் உறுதி அளித்ததையடுத்து போராடியவர்கள் நேற்று இரவு அங்கிருந்து வெளியேறினார்கள்.