சென்னை: புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையட்டி,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகஅரசின் சார்பில் நினைவு மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பெருமைக்குரியவர்.

இதனால்,பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார்.மேலும்,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார். அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில்,மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ‘மன்னர் இராஜகோபால தொண்டைமான் மாளிகை’ என்றும் பெயர் சூட்டினார்.

இந்நிலையில்,மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும்,மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில்,தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.