1982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் “மணல் கயிறு’. இப்படத்தை இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றது போல் ‘மணல் கயிறு 2’ படத்தை இயக்கியுள்ளார் மதன் குமார்.
இந்தப் படத்தில் எஸ்.வி.சேகரின் மனைவியாக ஜெயஸ்ரீ நடித்திருக்கிறார். எஸ்.வி.சேகரின் மகள் பூர்ணா. பூர்ணா கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று இருக்கிறார்.
எஸ்.வி.சேகர் தன் மகளை சம்மதிக்க வைக்க மாரடைப்பு வந்ததுபோல் நடித்து கடைசி ஆசையாக தன் மகளை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். பூர்ணாவும் வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் மாப்பிள்ளை இப்படித்தான் இருக்கவேண்டும் என 8 கண்டிஷன் போடுகிறார். பிறகு தன் மகளின் கண்டிஷனுக்கு ஏற்றவாறு மாப்பிள்ளையை தேட ஆரம்பிக்கிறார். இந்த கண்டிஷனைக் கேட்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சியடைந்து போய் இதைப் பற்றி விசுவிடம் கூறி தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடித் தருமாறு கேட்கிறார்.
இந்த கண்டிஷனுக்கெல்லாம் ஒத்துகொண்டது போல் ஹீரோ அஸ்வினை நடிக்கச் சொல்லி, இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்கிறார் விசு. போகப் போக உண்மைகள் எல்லாம் தெரியவருகிறது. உண்மைகள் எல்லாம் தெரிந்த பிறகு என்ன நடக்கிறது எனபதே இப்படத்தின் கதை.
முந்தய படங்களை விட இப்படத்தில் திறமைகளை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் அஸ்வின். டைமிங் காமெடிகளில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போல.சண்டை காட்சிகள் , நடனம் என அனைத்தும் சூப்பர்.
எஸ்.வி. சேகரின் டைமிங் காமெடி இப்போது வரைக்கும் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. அதிலும் ஷாம்ஸ், சுவாமிநாதன் கூட்டணியில் இண்டர்வியூ காட்சிகள் செம கலாட்டாக்கள்..! விசுவின் நடிப்பை சொல்லவே தேவையில்லை. மீண்டும் திரைக்கு வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.
பூர்ணாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படத்தில் இவர் இல்லாத சீனே இல்லை. அந்தமாதிரி ஒரு ஸ்கிரிப்ட். நன்றாக நடிக்கும் இவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைகலனு தெரியல.
இசை தரண் குமார் “அடியே தாங்கமாட்டேனே” மற்றும் “முதல் மழை” பாடல்கள் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. பின்னணியும் காமெடிக்கு பொருத்தமாகவே கொடுத்திருக்கீங்க. ஒளிப்பதிவு கோபி வாழ்த்துகள்.
இயக்குனர் மதன் குமார், படத்தில் காட்சிகள் எல்லாம் அருமையாக அமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் எஸ்.வி.சேகர் போட்ட எட்டு கண்டிஷன் போடும் காட்சிகளை வைத்து இப்போதைய மக்களுக்கு கதையை புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மணல் கயிறு 2’ காமெடிக்கு பஞ்சமே இல்லை,  இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.