டெல்லி:  தலைநகர் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆத்ஆத்மி கட்சி தலைவரம், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் கார்கேவுக்கு ஆதரவு அளித்தார்.

2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு என 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  இண்டியான (I.N.D.I.A)  கூட்டணியை உருவாக்கி செயலாற்றி வருகின்றன.

இந்த கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கனவே பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்று முடிந்த நிலையில், 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று பிற்பகல் ( டிசம்பர் 19ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம்  இன்றும் (20ந்தேதி) தொடர்கிறது.

இந்த நிலையில், INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்மொழிய வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மம்தாவின் திட்டத்துக்கு டெல்லி முதவல் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட  12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், இதை ஏற்க  மறுத்த மல்லிகார்ஜுன கார்கே, “நாம் முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு பிரதமரை பற்றி விவாதிப்பதில் என்ன பயன்? நாம் இணைந்து பெரும்பான்மையை பெற முயற்சிப்போம்” என்றார்.

தலித் சமூகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தேர்தலுக்கு பிறகே, பிரதமரை தேர்வு செய்வோம் என நேற்று வரை கூறி வந்த மம்தா, இன்று, கார்கேவை பிரதமராக முன்மொழிந்து இருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக  நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இந்த சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீட்டால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காங்கிரஸ் மீது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்திருந்தார். தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே அவநம்பிக்கை நிலவியதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

ஏற்கனவே, கடந்த 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம், கூட்டணியில் நிலவிய குழுப்பம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்! இண்டியா கூட்டணி சார்பாக கார்கே அறிவிப்பு…