டெல்லி:  உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசை தி.மு.க.வினர் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். அதேபோல, சில எதிர்கட்சியினரும் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் , ‘மத்திய அரசு’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றக் கோரி  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மத்திய அரசு என்ற பதத்திற்கு அரசியலமைப்பில் எந்தவொரு இடமும் இல்லை. நாடாளுமன்ற குழுக்களும் ஒன்றிய அரசு என்ற பதத்தையே ஆதரித்திருக்கின்றன. ஆகவே, அனைத்து அரசாணை மற்றும் அரசுக் கோப்புகளிலும் உள்ள மத்திய அரசு என்கிற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் வழக்கறிஞர், 1897 ஆம் ஆண்டு பொது உட்பிரிவுகள் சட்டத்தின் பிரிவு 3(8)(b) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ‘மத்திய அரசாங்கம்’ என்பதன் வரையறையை சவால் செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும், , அது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு முரணானது என்று வாதிட்டது. .

மையப்படுத்தப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பைக் காட்டிலும் மாநிலங்களின் ஒன்றியத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இந்திய ஆட்சி முறையின் உண்மையான தன்மையை இந்த சொற்கள் தவறாக சித்தரிப்பதாகவும், சட்டமன்ற நூல்களில் ‘மத்திய அரசு’ என்பதை ‘யூனியன் அரசு’ அல்லது ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்று விளக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க இந்தத் திருத்தம் அவசியம் என்று வாதிட்டார்.

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “இந்த பொதுநல மனுவில் என்ன இருக்கிறது? மத்திய அரசு என்று இருப்பதற்கும், ஒன்றிய அரசு என்று இருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியவில்லை. மத்திய அரசு, ஒன்றிய அரசு என 2 வார்த்தைகளையும் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டில் நீங்கள் எப்படி குறிப்பிடுகிறீர்கள் என்பது பிரச்னையே அல்ல. நீதிமன்றத்திற்கு இதனை விட முக்கியமான பல விவகாரங்கள் உள்ளன. மேலும், இது பொதுநல மனுவே அல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.