சென்னை: டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுங்கள் இல்லையென்றால், மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுவாங்கிக்குடிக்கும் குடிமகன்கள் மதுவை குடித்துவிட்டு, காலி பாட்டில்களை  அருகே உள்ள பகுதிகளில் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த பாட்டில்கள் உடைந்து சிதறி அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது முதல்கட்டமாக, மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், மது விற்பனை செய்யும் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

காடுகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களின் கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்பதால் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.