சென்னை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மதுரை சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார்.  இந்த  நூலகம் தென்மாவட்ட மக்களின் முக்கிய அடையாளமாக திகழும் என எதிர்பார்க்கப்படு கிறது.

மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில்  கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில்  தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது . மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன/ கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவோர் , பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த வெளிவந்த தமிழ், ஆங்கில நூல்கள் அந்தந்த துறைகளில், சிறந்து விளங்கும் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகம் கன்னியாகுமரியில் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுவதில் இருந்தும் மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  மேலும் 8 தளங்களில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகத்தில், அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப் பெரும் சான்றாதாரக் களஞ்சியமாக இந்த நூலகத்திலுள்ள அரிய நூல்கள் பிரிவு இருக்கும். கடந்த 1918ஆம் ஆண்டில்வெளிவந்த ஜஸ்டிஸ் ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 1824ஆம் ஆண்டில் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு, லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த‘ விழாவில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூலக கட்டிடம் அருகிலுள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழாவிற்கான மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், நூற்றாண்டு நாயகர் கருணாநிதிக்கு தி.மு.க.வின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் மிக சிறப்போடும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்ற உறுதியை மனதில் ஏற்றுக்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.

தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாக கொண்டாடி கொண்டிருக்கிறது. எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் கருணாநிதியின் புகழ் போற்றும் வகையில் ஜூலை 15-ந்தேதி தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

கலைஞர் நூலகத்தில் கலை இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள் என சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு ரூ.120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கருணாநிதி பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில் எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தளத்தில் மின்னணு தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு கள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.

கருணாநிதி சென்னை கோட்டூர்புரத்தில் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிலும் வல்லவர் எனப்படும் எ.வ.வேலுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர்களின் நெஞ்சமறிந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி மாலையில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் புகழ் போற்றும் இன்னும் பல சின்னங்கள் அடுத்தடுத்து அமைய இருக்கின்றன. அத்தனையும் வடிவமைப்பில் எழில் மிகுந்தது. மக்களுக்கு என்றென்றும் பயன் தருவது, கருணாநிதியின் படைப்பாற்றலும் நிர்வாகத் திறனும் போலவே நிலைத்தப் புகழைப் பெறக்கூடியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.