மதுரை:

டிடிவி தினகரன் மீது அதிமுக எம்.பி. குமார் கொடுத்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிடிவி தினகரன் தூண்டுதலில் நடிகர் செந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் செந்தில் மீது திருச்சி எம்.பி. குமார் புகார் அளித்தார்.

குமார் எம்.பி. கொடுத்த புகாரின் பேரில் திருச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.  பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் டிடிவி மற்றும் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகாரின் பேரில் தங்களை கைது செய்துவிடுவார்கள் என எண்ணி, இருவர் சார்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  அக்டோபர் 23ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.