மதுரை

திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 1 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அன்கித் திவாரி தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் காவலில் உள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணை நடைபெற்றபோது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில்,

“லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும்போது, அவர்களைக் கைதுசெய்யும் அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உள்ளது” 

எனத் தெரிவித்தார்.

நீதிபதிகள்,

”மத்திய அரசு அதிகாரிகள் தவறுசெய்யும் போது பிடிபட்டால், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்புகளை வழங்கியுள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரத்தை இந்த நீதிமன்றம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” 

என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.