துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை இன்று மாலை 6 மணிக்கு மேல் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது நியாயமானதாக இல்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வழக்கை விடுமுறைக்கால அமர்வில் அவசர வழக்காக மாலை 6 மணிக்கு மேல் விசாரிப்பதன் அவசியம் என்ன?” என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில், அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.