போபால்
மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த குன்வர் விஜய் ஷா ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி அம்மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவின் போது ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சோதனை முறையில் இவ்வாறு நடத்தப் படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சகம் ஒரு சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வருகை பதிவின் போது மாணவர்கள் பலவிதமாக பதில் அளிக்கின்றனர். அதை ஒழுங்கு செய்ய மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே தேசப்பற்று வளரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமுலாக்கப்பட உள்ள இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.