சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான ‘மாநாடு திரைப்படம்’ நான்கு நாட்களில் லாபமீட்டியுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மழை வருவதும் வெள்ளக்காடாக மாறுவதும் பின் மழைவிடுவதுமாக தொடர்ந்து தமிழ்நாட்டில் விளையாட்டு காட்டி வரும் நிலையில் ‘மாநாடு’ படம் ரிலீசாகி வேற லெவலில் கலக்கி வருகிறது.

டைம் லூப் கான்செப்டில் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் சிறுவர் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரையும் ‘ரிப்பீட்டு’ சொல்ல வைத்திருக்குக்கிறது.

எஸ்.ஜெ. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி. மகேந்திரா, வாகை சந்திரசேகர், எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், சுப்பு பஞ்சு, என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்குக்கிறார்கள்.

இந்தப் படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் 3 நாட்களில் லாபமீட்டியுள்ளதாகவும், தமிழக விநியோகிஸ்தர்கள் நான்கு நாட்களில் லாபம் பார்த்துள்ளதாகவும் பதிவிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.