சென்னை:
ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வர தடை விதித்துள்ளது. இதன்படி, கர்நாக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது .கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக நம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால் கர்நாடகத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடைவிதித்து இடைக்கால தீர்ப்பளித்தது.

இதையடுத்து மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம் மத அடையாள ஆடைகளை அணிய இடைக்கால தடை விதித்து இருப்பதால் அந்த மாணவிகளை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை கழற்றினால் பள்ளிக்குள் செல்லலாம் என்று தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று சில இடங்களில் சில மாணவிகள் மட்டுமே ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்குச் சென்றார்கள். ஆனால், சில பகுதிகளில் ஆசிரியர்கள் சொன்னதை கேட்காமல், படிப்பு தேர்வை விடவும் ஹிஜாப்தான் முக்கியம் என்று பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டிப்பாக ஒரே ஒரு அரசியல் கட்சிதான் இதன் பின்னணியில் உள்ளது என்று கூறியுள்ளார்.