சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதால்,   தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

பிரசாரம் ஓய்வுபெறுவதை யொட்டி, அரசியல் கட்சியினர்  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது.  களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக  தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டு உள்ளது.  இவற்றுள்  181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

மேலும், பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்து வது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், மாநிலம் முழுவதும்   6.23கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளது.  இவர்களில்,  85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேரு உள்ளனர்.

இந்தத் தோ்தலில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், இன்றும், நாளையும் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறத. நாளை (புதன்கிழமை)  மாலை 6மணியுடன் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதாவது, வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும்.

பிரசாரம் ஓய்ந்த பிறகு அமைதியாக இருக்கும் காலத்தில் எந்த வகையிலும் யாரும் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடக் கூடாது. வாக்காளா்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.  இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த  தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு,  தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும், வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் அனைத்தும் தயாா் நிலையில்  உள்ளது. மக்களவைத் தோ்தலில் நடத்தை விதிகள் மீறப்பட்டால் சி-விஜில் எனப்படும் கைப்பேசி செயலியில் புகாா் தெரிவிக்கலாம்.

இதுவரையில்  சி-விஜில்  செயலிக்கு 4,169 புகாா்கள் வந்தன. அவற்றில் 3,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 383 புகாா்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டன. 34 மட்டுமே தீா்க்கப்படாமல் உள்ளன.

‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச்சாவடி அடையாளச் சீட்டுகள் கடந்த 1-ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இதுவரையில் 92.80 சதவீதம் வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள சீட்டுகள் ஓரிரு நாள்களில் கொடுக்கப்படும்.

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களின் வசதிக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி வசதி உள்ளது. அதன்மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைந்தபிறகு கடைபிடிக்க வேண்டியது தொடர்பாக அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.

நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.

பிரச்சாரம் ஓய்ந்த உடன் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்.

ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.