சென்னை:  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய, தேர்தல் வாக்காக கருதி, தேமுதிகவை நடத்தி வரும் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அமைக்க வேண்டும் என்றால்,  தங்களுக்கு யார் அதிக தொகுதிகள் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று, பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்களை கூட்டத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது இறுமாப்பாக கூறினார்.

அதன்படி, , 14 மக்களவை தொகுதிகள், 1 ராஜ்யசபா தொகுதி ஆகியவற்றை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அவரது பிடிவாதம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவர், அதிமுக, திமுக, பாஜக கூட்டணியில் சேர பேரம் பேசி வந்தார். ஆனால், தேமுதிக கூட்டணியில் சேர்க்க திமுக தலைமை முன்வராத நிலையில், அதிமுக, பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை தொடர்ந்து. பின்னர் அதிமுக தலைவர்கள் நேரடியாக சென்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுபோல பாஜக சார்பிலும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், பிரேமலதாவின் நிபந்தனை மற்றும் பேரம் படியாததால், தேமுதிக தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (மார்ச் 20ந்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால், திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்க தயாராக உள்ளது. ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் தேமுதிக இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களவை தேர்தலில், யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார். முன்னதாக, தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்,  இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது என்று கூறினார்.