மத்திய பிரதேச மாநிலம் சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனைக்குச் சென்றனர், போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் தலைதெறிக்க ஓடினர்.

இதனால் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டதில் தூசி படிந்த ஒரு வித்தியாசமான அடி பம்பை தவிர வேறு எதுவும் தென்படவில்லை. அந்த அடிபம்பை அடித்துப் பார்த்ததில் அதிலிருந்து தண்ணீருக்கு பதில் சாராயம் வந்தது.

அந்தப் பகுதியை தோண்டிப் பார்த்ததில், 7 அடி ஆழத்தில் சாராய பேரல் புதைத்து வைக்கப்பட்டு தேவைப் படும் போது அதிலிருந்து அடித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

கள்ளச்சாராயத்தை கைப்பற்றிய போலீசார் புதைத்து வைத்துள்ள பேரல்களில் சாராயம் எப்படி நிரப்பப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

இந்த சாராய அடிபம்ப் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.