சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  இன்று அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு  முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசவும், அதைத்தொடர்ந்து, தொகுதி பங்கீடு குறித்து உறுதியாகும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், திமுகவைச் சேர்ந்த நபரே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினரின் வேட்டையில், தொடர்ந்து பல நூறு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசன் இன்று முதலமைச்சரை சந்தித்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச உள்ள நிலையில், போதை பொருள் நடமாட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.