சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக களமிறக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நடிகர் சேரன் தரப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேரன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சேரனுக்கு நடிகர் விஷயால் கடிதம் எழுதி உள்ளார். அதில்  ‘இயக்குநர் சேரன் அவர்கள்மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர்மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.

என்மீது தவறு இருந்து, அதைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன். ஆனால், சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற சட்டவிதி இல்லை.

இது எனது தனிப்பட்ட விருப்பம். சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் நிற்பதாலேயே, அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழிவாங்கும் என்பது  ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன்.

சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது.

எப்போதுமே உரிமைகள் என்பது கெஞ்சிக் கேட்டுப் பெறவேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெறவேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும் மக்களின் சார்பில் அவர்களுக்காகக் குரல் எழுப்பத்தான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.