சென்னை

டந்த 8 ஆண்டுகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை  காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மையத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதாகத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் முன்னிறுத்த உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில் இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி ஒத்திவைத்தனர்.