திருச்சி: திருச்சி அருகே உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்  சரத்குமார் கட்சி வேட்பாளர், திமுக முதன்மைச்செயலாளர் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். .இது சமத்து மக்கள் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்  இணைந்து 40 தொகுதிகளில்  சரத்குமாரின்  சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.  ஆனால், கட்சித் தலைவர் சரத்குமார் போட்டியிட வில்லை.  சரத்குமாருக்கு தென்மாவட்டங்களில் மட்டுமே ஒரளவுக்கு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதரவு இருந்த நிலையில், 40 தொகுதிகளில் வேட்பாளரை தேர்வு செய்யவே அவருக்கு முழிபிதுங்கி விட்டது. அதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளர்களையும் அறிவித்தார்.

திருச்சி அருகே உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதியில் சமக சார்பில்  திருச்சி மாவட்ட சமக செயலாளராக உள்ள பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் பிரசாரம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில்,  நேற்று திடீரென  நேற்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என் நேருவை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அதைத்தொடர்ந்து, முரளி கிருஷ்ணன் தனது மனுவை வாபஸ் பெற்றார்.

முரளி கிருஷ்ணன் 3 முறை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் திமுகவில் இணைந்தது சமக தலைவர் சரத்குமார் உட்பட அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.