ஞ்சாவூர்

சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

 

கி பி 1010 ஆம்  ஆண்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலைச் சோழ மன்னன் ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு செய்தார். அவருக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்தனர்  இந்த கோவிலின் குடமுழுக்கு. கடைசியாகக் கடந்த 1997ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த விழாவின் போது யாகசாலை பூஜையில் தீ பிடித்து எரிந்ததில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். அடுத்த குக்ஷமுழுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய நிலையில் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இந்த ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து திருப்பணிகளைக் கடந்த ஆண்டு தொடங்கினர்.

அதையொட்டி பெரியகோயில் ராஜகோபுரம், ராஜராஜசோழன் மற்றும் கேரளாந்தகன் நுழைவு வாயில்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.  சுமார் 12 அடி உயரம் மற்றும் நான்கரை அடி அகலம் கொண்ட செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட கோயில் கலசங்களுக்குத் தங்க மெருகூட்டும் பணிகள் நடந்தன. பழுதடைந்திருந்த கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவர் சிலைகள் நடராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்த பிறகு யாகபூஜைகள் தொடங்கியது.    அவ்வரிசையில்  நேற்று காலை 6ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 7ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 8ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இனி காலை  9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு, மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற உள்ளன.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். குடமுழுக்கிக் காண கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன  ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளதால் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.