தைப் பூசம் குறித்து முருகப் பெருமான் பற்றிய சிறப்புப் பதிவு – 2

நேற்று பார்த்ததைப் போல்  இன்னொரு முருகன் கோயில்.

 

இதுவும் திருக்கடையூருக்கு அருகில்தான் உள்ளது. அதாவது திருக்கடையூருக்கு அந்தப் பக்கம் திருவிடைக்கழி. இது இந்தப் பக்கம் இருக்கிறது. ஊரின் பெயர் செம்பனார்கோவில். திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது செம்பனார்கோவில்.

இங்கே, தந்தை சிவனார் அருள்பாலிக்கும் ஆலயமும் உண்டு. மைந்தன் முருகப்பெருமான் அருள் வழங்கும் கோயிலும் இருக்கிறது. பழைமையான இந்தக் கோயிலில் தேவேந்திர மயிலுடன், அழகுக் கோலம் காட்டி ஆட்சி நடத்துகிறார் முருகப்பெருமான்!

ஸ்ரீ வள்ளி- ஸ்ரீ தெய்வானை சமேதராக, 12 கரங்களில் ஆயுதங்களுடன், தேவேந்திர மயிலின் மீது அமர்ந்தபடி, ஸ்ரீ சண்முக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். பொதுவாகக் கந்தனுக்கு வலப்புறம் நோக்கி நிற்கும் மயிலின் முகம் இங்கே இடப்புறம் நோக்கி நிற்பது விசேஷம்!

இங்கே, முருகக்கடவுள், தனது ஆறு கிரீடங்களிலும் முறையே ஸ்ரீ பிரம்மன், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீபரமேஸ்வரர் மற்றும் ஸ்ரீபார்வதிதேவி ஆகியோரின் சக்தியைப் பெற்றிருப்பதாக ஐதீகம்.

ஆகவே, இவரை வணங்கினால், மும்மூர்த்தியரையும் முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.. தைப்பூச நன்னாளுக்கு முன்னதாக, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் துவங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகின்றன தைப்பூசத் திருவிழா.

தினமும் ஒவ்வொரு வித அலங்காரத்தில், முருகப்பெருமான் திருவீதியுலா வரும் அழகனை, அழகன் முருகனை, அவனுடைய அழகைக் கண்டால் சிலிர்த்துப்போவோம்!

தைப்பூசத் திருநாளில் ஸ்ரீ சண்முக சுப்பிரமணியருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, வில்வம், அரளி, மருக்கொழுந்து, ரோஜா, முல்லை, தாமரை என ஆறு விதமான மலர்களால் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எள்ளுச் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்ச்சாதம் என ஆறு வகை சாதங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

தேவ மயிலுடன் காட்சி தரும் கந்தனை வணங்கினால், சந்தான பாக்கியம் கிடைக்கும். கல்யாண வரம் கைகூடும். ஆறு வகை நைவேத்தியத்தில் ஒன்று, ஆறு வகை மாலைகளில் ஒரு பூமாலை என முருகக் கடவுளுக்குப் படைத்து வழிபட்டால், தொழில் சிறக்கவும் வியாபாரம் வெற்றி பெறவும் துணை நிற்பான், வேலப்பன்!

உயிர்கள் அனைத்தும் வாழ்க வளமுடன்!