1
ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் சபாஷ்நாயுடு படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் பங்குபெற்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்கிறார்கள்.
நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மீண்டும் நிர்வாகிகளின் பொறுப்புக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜைதான்.  இதற்காக நடிகர் சங்கத்திற்கு வாடகையாக 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக தந்தார்.  சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இந்தப் பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று சொல்லி கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் நடிகர் விஷால்.
 
2
இளையராஜா பேசும்போது, “இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டேன். கமலுக்கும்  பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்” என்றார்.
‘சபாஷ் நாயுடு’ படத்தில்  கமலின் இரு மகள்களும் பணியாற்றுகிறார்கள்.  கமல் – ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடிக்க.. அவர்களது மகளாக ஸ்ருதி நடிக்கிறார்.   இப்படத்தில் உதவி இயக்குநராக அக்‌ஷரா ஹாசன் பணியாற்றுகிறார்.
படப்பிடிப்பு பெரும்பாலும் அமெரிக்காவில் நடக்கிறது.
விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா எல்லாமும் கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி” என்று உற்சாகமாக கூறினார்.