கோபிசந்த் மாலினெனி இயக்கத்தில் ரவி தேஜா, சமுத்திரக்கனி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘க்ராக்’. தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று (ஜனவரி 9) வெளியாகவிருந்த இந்த படம் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தொடுத்த வழக்கால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

பின்பு, ‘க்ராக்’ வெளியீடு ஒத்திவைப்பு எனத் தகவல் பரவியது.

பின்பு இரவு 8 மணிக்கு நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி காட்சிக்கு வெளியானது ‘க்ராக்’. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில், ‘க்ராக்’ இயக்குநர் கோபிசந்த் மாலினெனி தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். “என்னைப் பொறுத்தவரை சினிமாவின் மீதான ஆர்வம் மிகப்பெரியது. இந்த சங்கராந்தியில் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக என்னுடைய குடும்பத்தை 100 நாட்கள் பிரிந்து இரவும் பகலும் பணியாற்றியது கடினமாக இருந்தது. வாழ்க்கையில் எந்தவொரு இயக்குநருக்கும் இப்படி ஒரு அழுத்தம் ஏற்படக்கூடாது என்று விரும்புகிறேன். இப்போது எங்களுக்குத் தேவையெல்லாம் உங்கள் அன்பு மட்டுமே. அதை நான் வாழ்க்கை முழுக்கப் பாதுகாப்பேன்.

எங்களுடைய ‘க்ராக்’ உங்கள் முன் இருக்கிறது. இந்தப் படத்துக்காக ஏராளமான சவால்களையும், கடினங்களையும் சந்தித்துள்ளோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.