திரையரங்கினுள் தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் துவங்கும் முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும். அப்போது திரையில் தேசியக்கொடியை ஒளிபரப்ப வேண்டும்  என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய கீதம் ஒலிபரப்பாகும் போது திரையரங்கில் இருக்கும் ரசிகர்கள்  அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி திரையரங்கில், தேசிய கீதம் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திரையரங்கினுள் நுழைவுச் சீட்டு வாங்கிச் சென்ற அவர்கள், தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் பிறகு நுழைவுச் சீட்டுக்களை கிழித்து எறிந்துவிட்டு வெளியேறிச் சென்றனர்.

இதனால் திரையரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.