கொடுமுடி மகுடேசுவரர் கோயில்
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும்.
கோயில் தகவல்கள்
மூலவர்: மகுடேஸ்வரர், கொடுமுடி நாதர்
தாயார்: திரிபுர சுந்தரி, மதுரபாஷினி, பன்மொழி நாயகி, வடிவுடைநாயகி
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி
ஆகமம் : சிவாகமம்
அமைவிடம்
கோயில் முன்புறம் திசைமாற்றிச் செல்லும் காவிரி ஆறு. இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. திருச்சி-ஈரோடு ரயில் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது.
கோவில் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கித் திசைமாறிச் செல்கிறது.
மரபு வரலாறு
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் மேருமலை சிதறிவிழுந்த துண்டுகள் மணிகளாகச் சிதறியபோது அவற்றில் ஒன்று கொடுமுடியாகவும் ஆகிற்று என்பது தொன் நம்பிக்கை.
இவ்வரலாற்றில் தொடர்புடைய தலங்கள்
சிகப்பு மணி : திருவண்ணாமலை
மரகத மணி : திருஈங்கோய் மலை
மாணிக்க மணி : திருவாட்போக்கி
நீலமணி : பொதிய மலை
வைர மணி : பாண்டிக்கொடுமுடி
வழிபட்டோர்
அகத்தியர், திருமால், பிரம்ம தேவர், பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர்
மும்மூர்த்திகள்
மகுடேசுவரர் கோயில் வளாகத்துக்குள், மகுடேசுவரர் சன்னிதிக்கும் வடிவுடைய நாயகி சன்னிதிக்கு நடுவில், வீரநாராயணப் பெருமாள்-மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சன்னிதியும் அமைந்துள்ளது.