சென்னை:
கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். ஆனால், இது எதேச்சையான விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என்றும் கனகராஜின் மனைவியும், அவரது உறவினர்களும் தெரிவித்து வந்தனர். ஆனால் இது சாலை விபத்துதான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தற்போது கொடநாடு வழக்கு மீண்டும் வேகமெடுத்திருக்கும் நிலையில், கனகராஜின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தச் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதற்காகச் சேலம் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கனகராஜின் மரணம் குறித்த விசாரணை மீண்டும் கையிலெடுக்கப்படுவதற்குக் கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சாமி கொடுத்த சில தகவல்களே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்சியங்களை கலைக்க முயன்றாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொடநாடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட முதல் கைது இது என்பது குறிப்பிடத்தக்கது.