சேலம்: கோடிநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமாக விபத்தில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது காவல்துறையினர் கார் ஓட்டுநரின் குடும்பத்தார் மற்றும் அவரது அண்ணனிடம்  விசாரணை தொடங்கியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடநாடு  கொலை கொள்ளையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூறியுள்ள நிலையில், தொடர்ந்து வரும் விசாரணைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியை அடுத்த கொடநாடு பகுதியிலுள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்ரல் மாதத்தில்,  நடந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கு காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 36வயதுடைய  கனகராஜ்,, சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, சித்திரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். 2009ல், போயஸ் கார்டனில் டிரைவராக வேலைக்கு சேர்க்கப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  பகுதியைச் சேர்ந்த கனகராஜ்.

இந்த கொலை கொள்ளை வழக்கில் கனகராஜ் உள்பட  கேரளாவைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்து. பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ், ஆத்துாரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு 2018ம் ஆண்டு ஏப்ரல் 28ந்தேதி சென்றபோது, ஆத்துார் புறவழிச்சாலை பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆத்துார் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்து என்று கூறி வழக்கை முடித்தனர். ஆனால்,  கனகராஜின் அண்ணன் தனபால் என்பவர், இது விபத்து இல்லை, திட்டமிட்ட கொலை என்றும்,  வேண்டுமென்றே வாகனத்தால் இடித்து கொல்லப்பட்டார்’ என, புகார் தெரிவித்து இருந்தார்.

போலீசார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.  தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. மீண்டும் அனைத்து நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்த விசாரணையின் பகுதியாக காவல்துறையினரின் தனிப்படையினர் நேற்று எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, சித்திர பாளையம் பகுதியில் உள்ள கனகராஜன் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கனகராஜி குடும்ப உறுப்பினர்களிடம் கனகராஜ் குறித்தும். கனகராஜி சகோதரர்களான தனபால், பழனிவேல் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை கொள்ள சம்பவத்துக்கு காரணமாவர்களை நெருங்கி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோட நாடு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. விரைவில் அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.