சென்னை: கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் டிஸ்மிஸ்  செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்  திட்டத்தின் கீழ் இணையும் பயனாளிகளுக்கு வேளாண்மை சார்பில் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.

அந்த பணத்தை பெற ஆன்லைன் மூலம் விவசாயிகள்  விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் போலி ஆவணங்களை கொண்டு விவசாயிகள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி அரங்கேறி இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டதாக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கிசான் திட்டத்தில் மொத்தம் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை  எடுக்கப்பட்டு இருக்கிறது. கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.